இடுகைகள்

2009 இலிருந்து இடுகைகளைக் காட்டுகிறது

வேற்று சாதிக்காரன்

புதியவனின் ஒவ்வொரு அசைவிலும் அவன் வேற்று சாதிக்காரன் என்பது தெரிந்தது. நாலைந்து இரவுகள் கழிந்தபின் கேட்டேன் ஏன் வினோதமாய் நடந்துகொள்கிறான் என்று. "உங்களைப் போல இருக்க முயல்கிறேன்" என்றான்.

மனம்

காய்ந்த எலும்பைக் கடிக்கும் நாய் ஒருகணமும் அவ்வெலும்பை விட்டகலாமல் தன் உயிர்போல் காப்பதைப் பார்த்திருக்கிறாயா? எலும்பைத் தின்ன முடியாதென்பது அந்த நாய் அறியாததா என்ன! அத்தனை நாடகமும் அடுத்தொரு கறித்துண்டு கிடைக்கும் வரை தான்.

இருமை

கணந்தோறும் நதி கரையையும் கரை நதியையும் மறு நிர்ணயம் செய்தவாறே உள்ளன. வற்றி மெலிந்து ஓடும் நதி கரையைத் தன்பால் இழுத்து இறுக்குகிறதா, இல்லை கரை நதியை அழுத்தி நெருக்கி ஒடுக்குகிறதா? காய்ந்து காணாமலாகும் நதி கரையையும் அழித்து தன்னையும் மாய்த்துக் கொள்கிறதா, இல்லை பெருகிக்கொண்டே போகும் கரை நதியை அழிப்பதால் தானும் அழிகிறதா? கரையில்லாத நதியொன்றிருப்பின் அதை நாம் நதியென்றுதான் அழைப்போமா?

தேய்பிறை

'சிலநாள் இன்பம் சிலநாள் துன்பம் என்பதாய் மனித வாழ்க்கை ஏனுள்ளது குருவே?' வானத்தை அண்ணாந்து பார்த்தார் குரு.  நிலவைப் பார்த்தவாறே சொன்னார்.  'முழு நிலவு எத்தனை அழகாய் இருக்கிறது!' 'ஆனால் நேற்றல்லவா பௌர்ணமி?' மனதில் நினைத்தாலும் நான் அதை வெளியில் சொல்லவில்லை. என் முகம் நோக்கி முறுவலித்த குரு சொன்னார் 'ஆம், நேற்றுத்தான் பௌர்ணமி.  சொல் இராகவா, பௌர்ணமி இரவு முழுவதும் முழு நிலவு தெரியுமென்றா நினைக்கிறாய்?  கொஞ்சம் கொஞ்சமாய் வளந்து வரும் நிலவு ஒரே ஒரு கணத்தில் முழுநிலவாய்க் காட்சியளித்துப் பின் கொஞ்சம் கொஞ்சமாய் தேயத்தொடங்கவில்லை என்று எப்படித் தெரியும் உனக்கு?' 'அப்படியென்றால் இன்பம் துன்பம் என்பதெல்லாம் வெறும் காட்சி மயக்கங்கள் தானா?' 'ஆமென்று சொன்னால் நம்பி விடுவாயா?' இல்லையென்பது தான் பதில்.  ஆனால் மௌனமாய் தலை கவிழ்ந்தேன். 'வளர்வதெல்லாம் தேயுமென்றும் தேய்வதென்பதே மீண்டும் வளர்வதற்காகத்தான் என்றும் ஒரு சாரார் நம்புகிறார்கள்.' 'ஆனால் எந்நாளும் மாறாமல் இருக்கும் கதிரவனும் கடலும் மலைகளும் இருக்கும் பிரபஞ்சத்தில் தானே

கவிதைக்குப் பொய்யழகு

யாதனின் யாதனின் நீங்கியான் நோதல் அதனின் அதனின் இலன் எதிலிருந்தெல்லாம் விலகியிருக்கிறோமோ அவற்றாலெல்லாம் நாம் துன்பப் படுவதில்லை.  எவ்வளவோ நாளுக்கு முன் கேள்விப்பட்ட குறள்.  இருமை என்பது நாம் பார்க்கும், கேட்கும், உணரும், எண்ணும் அனைத்தின் இயல்பு என்பதை அறியாத நாளில் "சாமியாராய்ப் போய் விட்டால் துன்பப்பட மாட்டாய்" என்று இந்தக் குறள் சொல்வதாக நினைத்துக் கொண்டேன்.  இப்போது இந்தக் குறளை நினைக்கும்போதெல்லாம் மனதில் தோன்றுவது இந்தக்குறள் ஒருபாதி உண்மையை மட்டுமே சொல்கிறது என்பது தான். எவற்றிலிருந்து நாம் நீங்கியிருக்கிறோமோ, அவற்றின் மூலம் நாம் துன்பப்படுவதில்லை என்பது என்னவோ உண்மைதான்.  ஆனால் அவற்றின் மூலம் கிடைக்கும் இன்பமும் நமக்குக் கிடைக்காது என்பதையும் நாம் மறக்கக் கூடாது அல்லவா? ஒரு இலக்கியத்தின் ஆசிரியரின் கருத்தை நாம் தவறென நினைக்கும்போது, அதை இரண்டு விதமாகப் பார்க்கலாம்.  "வள்ளுவர் இந்தக் குறளில் அவருக்குத் தெரிந்த அறுதி உண்மையைச் சொல்லி விட்டார், அவரை விட எனக்கு அதிகம் தெரியும்" என்று நான் நினைக்கலாம்.  மாறாக, வள்ளுவர் வேண்டுமென்றே பாதி உண்மையை எழுதி வைத்தா

கவிஞன்

கவிஞன் என்பவன் கவிதையை எழுதுபவன் அல்லன்.  அதை முதன்முதலில் வாசிப்பவன்.  வாசித்து அதை மானிட மொழியில் மொழிபெயர்ப்பவன்.

அடுத்து எந்த மேகமோ?

அடியிலும் முன்னும் பின்னும் காற்றுப்போகா இடைவெளியில் ஆயிரம் கோடிப்பேர் என்னையும் சேர்த்து. என் முன்னிருந்தவனை நான் தள்ள அவன் முன்னிருந்தவனை அவன் தள்ளினான். என்னைத் தள்ளுபவனுக்காவது தெரியுமா எங்கே தான் போகிறோமென்று? ஏன் திடீரென்று இப்படிக் கத்துகிறார்கள்? இந்தப் பள்ளத்தில் ஏன் குதிக்க வேண்டும்? யோசித்து முடிக்குமுன் அருவியாய்ப் பொழிந்தேன். அப்படி எங்கே தான் போகிறோம்? ஒரு உலர்ந்த பாறையில் தெறித்து வழிந்தேன். அர்த்தமின்றி ஓடிய அத்தனை பேரையும் பார்த்தேன். வெயில் சுடத்தொடங்கியது.  ஐயோ மறுபடியுமா?

கவிதையும் உரைகளும்

உரைகள் (பதவுரை, பொழிப்புரை) என்பவை எல்லாம் கவிதையின் பொருளுக்குச் செல்லும் பாதைகளாக/ஏணிகளாக மட்டுமே இருக்க முடியும்.  கவிதையின் வார்த்தைகள் அனைத்தும் சேர்ந்து கூறாததை, கூற முடியாததை பேசுவதே கவிதை. மொழியின் நடை அல்ல, நடனமே கவிதை.  பொருளுரைகள் நடக்க மாட்டாதவனுக்கான ஊன்றுகோல்கள்.  ஊன்றுகோல்களுடன் யாரும் நடனமாட முடியாது.

அப்பா சீரியஸ், உடனே வரவும்

முகவரி மாறி என்னிடம் வந்த கடிதம் இன்னமும் என் அலமாரியில்தான் இருக்கிறது. அதைப் பார்க்கையில் மட்டும் யோசிக்கிறேன் -- மகனைப் பார்க்காமலே போய்ச் சேர்ந்திருப்பாரோ?

மறு ஒலிபரப்பு: புது வலைப்பதிவு

அறிவிப்பு: நான் ரசித்த மற்றவர்களின் படைப்பு -- பெரும்பாலும் ஓரிரு வரிகளை மட்டும் -- பதிப்பிப்பதற்காக மறு ஒலிபரப்பு என்னும் புதிய வலைப்பதிவை ஆரம்பித்துள்ளேன்.

யாதும் ஊரே

பதினொன்றாம் வகுப்பில் என்று நினைக்கிறேன்.  "யாதும் ஊரே" புறநானூற்றுப் பாடல் மனப்பாடச் செய்யுளாக இருந்தது.  முதல் இரண்டு வரிகளைத் தவிர மற்ற எதையும் வாசிக்கக்கூட முடியவில்லை -- கேள்விப் பட்டிராத வார்த்தைகள் அதுவரை பார்த்திராத முறையில் கோர்க்கப்பட்டு ஆக்கப்பட்டிருந்தது அப்பாடல்.  ஒரு வீம்புக்காகத்தான் அதை மனப்பாடம் செய்தேன்.  புரிந்துகொள்ளக் கஷ்டமாக இருக்கும், அல்லது நினைவில் வைத்து பரீட்சையில் எழுதக் கஷ்டமாக இருக்கும் பகுதிகளை நான் பொதுவாகப் படிப்பதில்லை.  இந்தப்பாடலை மனப்பாடம் செய்ய என்னை எது தூண்டியது என்று தெரியவில்லை. பள்ளியில் படிக்கையில் அந்தப் பாடலின் அர்த்தம் முழுவதுமாய் விளங்கவே இல்லை.  ஆனாலும், அந்தப் பாடலில் என்னை மயக்குமாறு எதுவோ இருந்தது.  கல்லூரி நாட்களில் பலமுறை எனக்குள்ளேயே அந்தப்பாடலை சொல்லிக்கொள்வேன்.  MCA படித்த காலத்தில்தான் பாடலின் அர்த்தம் கொஞ்சம் கொஞ்சமாய் புரியத்தொடங்கியது.  அன்றிலிருந்து இன்று வரை, குறைந்தது ஒரு ஆயிரம் முறையாவது மனதுக்குள் அந்தப் பாடலின் வரிகளைச் சொல்லியிருப்பேன். எத்தனையோ நூற்றாண்டுகளுக்கு முன் இப்பேர்ப்பட்ட ஒரு பொக்கிஷத்தை எழுதி வ

உறவுகள்

ஜெயமோகன் எழுதுகிறார்: "உறவுகள் என்பவை எங்கோ ஏதோ ஒரு புள்ளியில் முறிய வேண்டியவை, முறியாமல் தடுக்க முடியாதவை. இது குரூரமானதாக இருக்கலாம். ஆனால் உண்மை. எண்பது தொண்ணூறுக்கு மேல் வயதானவர்களிடம் கேட்டுப்பாருங்கள். அவர்கள் உறவுகளை விட்டு விலகிக்கொண்டே இருந்திருப்பதைச் சொல்வார்கள். பின்னுக்கு சென்று கொண்டே இருப்ப்வையே உறவுகள் நட்புகள்.ஒரு  தவிர்க்க முடியாத தன்மையை கடைசியில் சென்றடைகிறோம். "உறவுகள் பல வகையில் முறிகின்றன. பலவகைகளில் தேய்ந்தழிகின்றன. பலவகைகளில் காணாமல் போகின்றன. உறவுகள் முறிவதற்கான காரணங்களை நாம் பலவகைகளில் கற்பனைசெய்து கொள்கிறோம். நம் தவறு, பிறர் தவறு, சூழல், என்றெல்லாம். உண்மையில் அப்படி அல்ல. உறவுகள் காலத்தில் ஓடும் நீரில் மிதக்கும் சருகுகள் போலச் செல்கின்றன. சருகுகள் விலகுவதும் நெருங்குவதும் அவற்றின் கையில் இல்லை." மூலம்: பின் தூறல்:கடிதங்கள்

அம்மா

மூன்று வயதில் வண்ணத்துப்பூச்சிக்கே பயப்படுவேனாம். ஐந்து வயதில் பக்கத்து வீட்டு கிளிக்கு பயந்தது நினைவிருக்கிறது. கரப்பான்பூச்சிக்கு பயந்து தெருவையே கூட்டியது எட்டு வயதில். பதிமூன்று வயதில் பேய்ப்படம் பார்த்து இரண்டு நாள் காய்ச்சல். இருபத்து மூன்றாம் வயதில் ஒருமுறை, நாய்க்கு பயந்து இரண்டு தெரு சுற்றிச் சென்றிருக்கிறேன். "நாய் என்ன செய்யும் நீ பாட்டுக்கு நட" சொல்கிறேன் மகளிடம். நேற்றிரவு தான் வீட்டில் ஒரு எலியைக் கொன்றேன். எல்லாம் அமுதா பிறந்ததற்கப்புறம் தான்.

நின்னையே ரதியென்று நினைக்கிறேனடி, கண்ணம்மா

ஏற்கெனவே பலமுறை கேட்ட பாடல்தான். என் அண்ணன் கல்லூரியில் படித்துக்கொண்டிருக்கும்போது பாரதியார் மீதும் அவர் பாடல்களின் மீதும் அவனுக்கு ஆர்வம் மிகுந்தது. அப்போது அவன் பதிந்த ஒரு பாரதியார் பாடல் கேசட்டில் தான் இந்தப் பாடலை முதன்முதலாகக் கேட்டேன். இன்றுவரை இதன்மீது அத்தனை பெரிய அபிப்ராயம் இருக்கவில்லை எனக்கு. இன்று தற்செயலாக இதை YouTube-ல் பார்த்து வியக்கிறேன். அமலாவின் நடனம், பாரதியின் வரிகள், இசை (எம் எஸ் விஸ்வநாதன்), ஜேசுதாஸின் குரல் -- அத்தனையும் சேர்ந்து இந்தப் பாடலே ஒரு அற்புதமான அனுபவமாகிறது.

படுக்கையில் அமர்ந்திருக்கிறேன்

ராத்திரிப் பூச்சிகளின் விச் விச் மின்விசிறியின் கரங் கரங் சோடியம் வேப்பரில் நனையும் வீதி இன்னும் அணைக்காத குழல்விளக்கு மனதில் பொங்கி வழியும் உன் முகம் உன் கை கோர்த்து நடந்த நினைவுகள் இந்த இரவும் விடியத்தான் போகிறதோ?

படையல்

படையல் புசிக்கும் தெய்வம் போல் என் கவிதைகளை வாசிக்கிறாள் அவள்.

வாழ்க்கை? -- எதிர்வினை

நண்பர் அமரின்  வாழ்க்கை? என்ற பதிவிற்கு பின்னூட்டம் எழுத ஆரம்பித்து பெரியதாக வந்ததால் இங்கே பதிப்பிக்கிறேன்.  அந்தப் பதிவையும் ஏற்கெனவே இருக்கும் பின்னூட்டங்களையும் (comments) முதலில் படித்து விடுங்கள். ( http://vettiyaa-pesu.blogspot.com/2008/07/blog-post_14.html ) " கடவுளுக்கு வரையறை கிடையாது. க்ச்டுர்ச்து க்கு எப்படி எந்த ஒரு வரையரயும் இல்லையோ, இருக்க முடியாதோ அதுபோல். " க்ச்டுர்ச்துவைப் பற்றி அதனால்தான் யாரும் பேசவில்லை.  எதைப்பற்றியெல்லாம் நம் மனம் நினைக்கிறதோ, அதற்கெல்லாம் ஒரு வரையறை இல்லாமல் இருக்க முடியாது.  வரையறையே இல்லாத ஒன்று வேண்டும் என்று தேடித்தான் க்ச்டுர்ச்துவை நீங்கள் கண்டடைந்திருப்பீர்கள்.  உங்களளவில், இதை எழுதும்போது, "க்ச்டுர்ச்து என்பது வரையறை இல்லாதது" என்ற வரையறை இருந்திருக்கும்.  கடவுளைக்கூட "வரையறைகளுக்கு அப்பாற்பட்டவன்" என்ற வரையறையோடுதான் மனிதமனத்தால் நெருங்க முடியும்.  பிரபஞ்சம் எல்லையற்றது என்று வரையறுப்பதைப் போல. இங்கே வரையறை என்பது அறிவியலில் உள்ளதுபோல முழுமையான (complete) ஒன்றாக இருக்கத் தேவையில்லை.  ஒவ்வொரு மனமும் அ

பொய்த்தேவு

நாவல் வாசிக்கும்போது அதிலிருந்து என் மனதிற்குப் பிடித்த சொற்றொடர்களைக் குறிப்பெடுத்து வைப்பது என்னுடைய வழக்கம்.  க.நா.சு எழுதிய பொய்த்தேவு நாவலை இப்போதுதான் படித்து முடித்தேன்.  க.நா.சுவின் நடையே இப்படித்தானா இல்லை இந்த நாவல் இப்படி இருக்கிறதா என்று தெரியவில்லை -- சொல்ல வரும் அனைத்தையுமே கதையிலிருந்து பிரிக்கமுடியாத, தனித்து உபயோகிக்க முடியாத வாக்கியங்களாகவே எழுதியிருக்கிறார். பொய்த்தேவு என்ற தலைப்பின் அர்த்தம் கிட்டத்தட்ட நாவலைப் படித்து முடிக்கும் தறுவாயில்தான் எனக்கு விளங்கியது.  நான் படித்த சிறந்த நாவல்களுள் இதுவும் ஒன்று என்று நிச்சயமாகச் சொல்லலாம்.  படித்து முடித்தபின், வாழ்க்கையைப் பற்றிய மலைப்பும், எனக்கான தெய்வங்கள் என்னென்ன என்ற கேள்வியும், ஒரு சிறந்த இலக்கியத்தைப் படித்த திருப்தியும், இந்தப் புரிதலுடன் மீண்டும் ஒருமுறை இந்த நாவலைப் படிக்கவேண்டும் என்ற ஆவலும் மனதில் ஓடுகின்றது. நான் இவ்வளவு தூரம் ரசித்த ஒரு நாவலிலிருந்து இரண்டே வாக்கியங்கள் தான் சேகரித்து வைத்திருக்கிறேன் என நினைக்கையில் ஆச்சரியமாக இருக்கிறது.  இன்னொருமுறை வாசித்தால் இன்னும் சில நல்ல வாக்கியங்கள் கிடைக்கு

மசாலா

"மசாலா படம் எடுப்பது அவ்வளவு எளிதான காரியமில்லை" என்று பலர் சொன்னாலும் எனக்கு இதுவரை இயக்குநர் பேரரசு மேல் பெரிய மரியாதை இருந்ததில்லை.  வீட்டில் அம்மாவும் பெரியம்மாவும் வேறுவேறு சேனல்களில் ஓடிக்கொண்டிருந்த பல படங்களிலிருந்து 'திருப்பாச்சி'யைத் தேர்வு செய்து பார்க்க ஆரம்பித்தார்கள்.  நிச்சயமாக அது ஒரு சீரியஸ் படம் இல்லை.  தர்க்கம் செய்யும் மூளையை ஒதுக்கி வைத்து விட்டுப் பார்த்தால் பெரிதாக ஒன்றும் குறை சொல்ல முடியாது.  பேரரசு போன்ற இயக்குநர்களின் மேல் இனிமேலாவது கொஞ்சம் மரியாதை காட்டுவேன் என்று நினைக்கிறேன்.