இடுகைகள்

ஜனவரி, 2016 இலிருந்து இடுகைகளைக் காட்டுகிறது

‘கற்பழிப்பு’ என்னும் அபத்தம்

கற்பு என்றால் ஒழுக்கம். ஒழுக்கம் தவறுவது என்பது ஒருவரது சொந்தச் செயலாலேயே நிகழ முடியும். நான் பொய் சொன்னால் நான் ஒழுக்கம் கெட்டவன்; என்னிடம் ஒருவர் பொய் சொன்னால் பொய் சொன்னவரே ஒழுக்கம் கெட்டவர்; எனது ஒழுக்கத்துக்கு எந்த பாதிப்பும் இல்லை. ஒரு ஆண் ஒரு பெண்ணைப் பலாத்காரம் செய்தால் அதை ‘கற்பழிப்பு’ என்றும் பாதிக்கப்பட்ட பெண்ணைக் ‘கற்பிழந்தவள்’ என்றும் கூறுகிறோம். இந்த வார்த்தைப் பிரயோகம் நம்முடையது ஆணாதிக்க சமுதாயம் என்பதற்கு இன்னொரு சான்று. ஒரு ஆண் தவறு செய்த இடத்தில் பாதிக்கப்பட்ட பெண்ணைப் பழிப்பது எந்த விதத்திலும் நியாயமில்லை. நல்லதொரு தமிழகத்தை விரும்பும் அனைவரும் (முக்கியமாகப் பெண்கள், பத்திரிகைகள், தொலைக்காட்சிகள்) பெண்களைப் பழிக்கும் இந்த வார்த்தைகளை இனிமேல் உபயோகிக்கக் கூடாது என்பது என்னுடைய விருப்பம்.

துன்பப்படுதல்

அடிபட்ட குழந்தை அழுகிறது. வலி குறைந்ததும் விளையாட்டு மீண்டும் தொடர்கிறது. ஏமாற்றமடைந்த குழந்தை அழுகிறது. கொஞ்ச நேரத்திலே வேறு ஏதோ அதன் கவனத்தை ஈர்க்கிறது; குழந்தை அழுகையை மறக்கிறது. பயமடைந்த குழந்தை அழுகிறது. அன்னை வந்து பயம் போக்கியதும் அழுத குழந்தை சிரிக்கிறது. குழந்தையாய் இருக்கையில் மட்டுமல்ல. வளர்ந்த பிறகும்கூட அழும் நம் மனம் சீக்கிரமே அழுகையை நிறுத்தி வேறு எதையோ நினைக்க ஆரம்பிக்கிறது. நாம்தான் அதை அனுமதிப்பதில்லை. மீண்டும் மீண்டும் "எனக்கு இப்படி நடந்ததே" என்று வலுக்கட்டாயமாக யோசித்து அழுகையை வரவைத்துக் கொள்கிறோம். துன்பம் நேர்ந்திருக்கும்போது நாம் கவலைப்படத்தான் வேண்டும் என்று நமக்கு நாமே விதித்துக்கொள்ளும் நிபந்தனைதானே இது? பார்க்க: தீதும் நன்றும்

தீதும் நன்றும்

தமிழ் சினிமாவில் ரொம்ப நாளாகவே துன்பப்படுவது போற்றப்படுகிறது. நாயகர் (நாயகன், நாயகி, அவர்களது குடும்பம், நண்பர்கள் முதலியோர்) நல்லது மட்டுமே எப்போதும் செய்தாலும் அவர்களைத் துன்பம் வந்தடைவதுபோல் காட்சிகள் வைப்பது மட்டுமல்லாது நேரடியாகவே ‘துன்பப்படுவது உயரந்தது’ என்று சொல்வதும்கூட உண்டு. பாஞ்சாலி உன்னிடத்தில் சேலை கேட்டாள் பார்த்தனவன் உன்னிடத்தில் கீதை கேட்டான் நானிருக்கும் நிலையில் உன்னை என்ன கேட்பேன் இன்னும் நன்மை செய்து துன்பம் வாங்கும் உள்ளம் கேட்பேன் நன்மை செய்து துன்பம் வாங்கும் உள்ளம் கேட்பேன் ( வரிகள்  • பாடல் ) இந்தப் பாடல் வரிகள் அதற்கு ஓர் உதாரணம். இந்தப் பாடலை நான் முதல் முதலில் கேட்டபோது எனக்கு இருபத்தொன்று அல்லது இருபத்திரண்டு வயது இருந்திருக்கும். அதற்கு முன் துன்பப்படுவது பெருமை என்று ஒரு உள்ளுணர்வு மட்டும் இருந்த எனக்கு இதன்பின்னர் துன்பப்படுவது வெளிப்படையான விருப்பமாகவே ஆனது. ஒரு வேலையை இரண்டு வழிகளில் செய்யலாம் என்றால் அதில் கஷ்டமான வழியையே தேர்ந்தெடுப்பேன். கஷ்டமான வழியில் அந்த வேலையை முடித்தால் கஷ்டப்பட்டு சாதித்தோம் என்ற தற்பெருமை. வேலையை முடிக்காமல் போன