சுவர்களைக் காட்டிலும் கதவுகள் பயனுள்ளவை. ஆயினும் சந்தர்ப்பவாதம் தப்பென்றே சாதிப்போம். நம் கொள்கை அப்படி. சுவரில் சிறுநீர் கழிக்கலாம். காதலி பெயரைக் கிறுக்கலாம். போஸ்டர் ஒட்டலாம். ஸ்டம்ப் வரைந்து கிரிக்கெட் விளையாடலாம். சிகரெட் அணைக்கலாம். கதவிற்குக் காவலாள் போட வேண்டும். முடியாதெனில் பூட்டேனும் வாங்க வேண்டும். வேறு வேறு கதவை வேறு வேறு மாதிரி பூட்ட வேண்டும் திறக்க வேண்டும். எவனும் எட்டிப் பார்க்கிறானா என்று பார்க்க வேண்டும். நாமும் எட்டிப் பார்க்கலாம் தான் - ஆனால் கொள்கை இடம் கொடுக்குமா தெரியவில்லை.
என்னைப் போலவே இன்னும் நூறு பேர் இதே மரத்தில் இருந்தாலும் என் வாசனை தனிப்பட்டது. தனித்துவத்தின் காரணம் எந்தெந்த விதை, எந்தெந்த வேர், எந்தெந்த நீர், எந்தெந்த மண்? விடை சொல்வது யார்?
இந்த உலகத்தில் இது ஒன்னும் புதுசில்லே ஒன்னு ரெண்டு தப்பிப் போகும் ஒழுக்கத்திலே விதி வழி சொல்லி போட்டான் மனுஷப் புள்ள விதி விலக்கில்லாத விதியுமில்லே தல்ஸ்தோய் காலத்தில் இருந்த அதே மனநிலையில் தான் வைரமுத்து காலத்து காதலர்களும் இருக்கிறார்கள். ( இருக்கிறோம் என்று சொல்வதுதான் சரி என்று நினைக்கிறேன்.)
ஒவ்வொரு முறை காற்றடிக்கையிலும் நிறைய நிறையப் பூ உதிர்த்து காற்றெல்லாம் மணம் நிறைத்து பூவால் மண் மறைத்தது அருவிக் காலத்தில். உயிர்வாழும் ஏக்கத்தில், பூவோடு இலையெல்லாம் உதிர்த்தெறிந்து மொட்டை மரமாய் நின்றாலும் நிழல் கொஞ்சம் கொடுத்தது ஆற்றுக் காலத்தில். பூவும் பழமும் விதையுமெல்லாம் மண்ணோடு போவது அறிந்து பட்ட மரம்போல் ஆனபின்பும் என்றேனும் ஒன்றிரண்டு பூப்பூப்பது கடற் காலத்தில்.