எங்கே பிராமணன்

இந்தக் கதையைப் படித்ததும் மனதில் என்னவோ தோன்றியது -- எங்கேயோ கேட்ட குரல் மாதிரி ஒரு உணர்வு. முதல் இரண்டு முறை படித்தும் ஏனென்று புரியவில்லை. இரண்டு மணிநேரம் கழித்து மீண்டும் படித்தபோது தான் என்னவென்று புரிந்தது.

*ஓரளவுக்கு* இந்தக் கதையையொட்டிய சம்பவம் என் வாழ்விலும் நடந்தது என்பதுதான் அது. கிட்டத்தட்ட எல்லாரையும் போலவே நானும் காதலித்தேன். கிட்டத்தட்ட எல்லாரையும் போலவே என் காதலும் நிராகரிக்கப்பட்டது. கிட்டத்தட்ட எல்லாரையும் போலவே நானும் ரொம்ப அலட்டிக்கொள்ளவில்லை (இப்படிச் சொன்னால் அது உண்மையாய்த்தான் இருக்குமா என்று தெரியவில்லை).

அந்தப்பெண் எனக்கு ஒரு நல்ல தோழி. அவ்வப்போது அவளுக்கு நான் சில உதவிகள் செய்வதுண்டு. என்னை எதுவோ வாங்கிவரச் சொன்னவள், என்னிடம் ஒரு நூறு ரூபாய் நோட்டைக் கொடுத்தாள். "காதலி" கையால் கொடுத்த நூறு ரூபாய்க்கு பல கோடி மதிப்பல்லவா? நானும் பொக்கிஷமாய் அதை வைத்திருந்தேன். அந்தப் பணம் என்னிடம் வந்த முதல் வாரம், மூன்று முறை அதை எடுத்து எடுத்துப் பார்த்தேன். அடுத்த வாரம் ஒரே ஒருமுறை தான் பார்த்தேன். அப்புறம் அதை எப்போதாவது நினைத்துக் கொள்வதுண்டு. எடுத்துப் பார்க்கும் அளவுக்கு அதன்மேல் ஆசை வரவில்லை.

அப்புறம் ஒருநாள் -- வெள்ளிக்கிழமை சாயங்காலம். ரயில்வே ஸ்டேஷனில் ரயிலுக்காகக் காத்திருக்கும் வேளையில் அங்கிருந்த புக் ஷாப்பை வேடிக்கை பார்க்கத் தொடங்கினேன். அன்று நான் ரொம்பவே தைரியமாக புக் ஷாப்புக்குள் போனேன். ஏனென்றால் என்னிடம் அப்போது மொத்தம் இருந்ததே 15 ரூபாய் தான். (காசு கையில் இருக்கும்போது புக்ஷாப் பக்கம் போவது ஆபத்தான விஷயம். அப்படிப் போய் நான் சிலநாள் பட்டினி கிடந்திருக்கிறேன்.)

அன்றைக்குத்தான், சோ எழுதிய "எங்கே பிராமணன்" புத்தகத்தை அந்தக் கடையில் பார்த்தேன். அதை விட்டுவிட்டு வர மனமே இல்லை. காசே இல்லாத பர்ஸை மீண்டும் எடுத்து, பணம் இருக்கிறதா என்று பார்க்கையில் தான் அந்த நூறு ரூபாய் உள்ளே இருந்ததை கவனித்தேன். ரொம்ப நேர யோசனைக்குப்பின் அந்த நோட்டைக் கொடுத்து நாவலை வாங்கிவிட்டேன். நல்லவேளை. கடைசிவரை என் காதலை ஏற்கவில்லை அவள். அப்புறம், "நான் கொடுத்த நோட்டை விட உனக்கு நாவல் தான் முக்கியமாப் போச்சுல்ல?" என்று அவள் கேட்டு விட்டால்? ;-)

கருத்துகள்

  1. ஹா!ஹா!
    அப்படி கேட்டாங்களா?(கடைசி வரி)

    பதிலளிநீக்கு
  2. வருகைக்கு நன்றி வடுவூர் குமார். உண்மையில் அவள் சந்தோஷப்பட்டிருப்பாள், பைத்தியக்காரத்தனமாக ரூபாய் நோட்டை அடை காக்காமல் இருந்தேனே என்று :)

    பதிலளிநீக்கு
  3. எல்லார் வாழ்க்கையிலும் இருக்கும் ஒரு கதை .......... ஹ்ம்ம் என்னுடைய 100 ரூபாய் இன்னும் ஒருவரிடம் இருப்பதாக கேள்வி ......... எல்லாம் விதி :P

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. ஐயோ பாவம், சின்னப்பையன் பொழச்சுப் போறான். விட்டுடுங்க :)

      நீக்கு

கருத்துரையிடுக

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

பிளாஸ்டிக் குடும்பம்

வைரமுத்துவின் ‘பாற்கடல்’

ஆயிரங்காலப்பயிர்