வீடு திரும்புதல்

12 வருடங்களாகிறது, நான் வீட்டைவிட்டுத் தனியாகத் தங்கியிருக்க ஆரம்பித்து.

முன்பெல்லாம் வாழ்க்கையில் என்னென்னவோ செய்ய வேண்டும், சாதிக்க வேண்டும் என்றும் ஆசையிருக்கும். பயணம் செய்ய வேண்டும் என்பது ஒரு தீராத ஆசை. வாய்ப்புக் கிடைக்கும் போதெல்லாம் முடிந்த இடங்களுக்குப் போய்க்கொண்டுதான் இருக்கிறேன். ஆனாலும் அண்டார்டிகா செல்வது, கப்பலில் நீண்ட பயணம் செய்வது, உலகிலேயே நீளமான சாலை முழுவதையும் பயணித்துக் கடப்பது போன்று பல நிறைவேறாத ஆசைகள் எப்போதும் இருந்து வருகின்றன. எவ்வளவுதான் முயற்சித்தாலும் இப்படி நிறைவேறாத சில ஆசைகள் இருக்கும் என்பது கொஞ்சம் கொஞ்சமாகப் புரிகிறது. நிறைவேறாத ஆசைகள் பல இருந்தாலும் மனநிறைவுடன் வாழ முடியும் என்பதும் தெளிவாகிறது.

வீட்டிலுள்ளவர்களோடு ஒரு நீண்ட சாலைப்பயணம் (roadtrip) செய்ய வேண்டும் என்பது எனது நீண்ட நாள் ஆசை. சென்ற மாதம் குடும்பத்துடன் ராஜஸ்தான் சென்றோம். நல்ல பயணம். பல நாள் கழித்து இந்திய சாலைகளில் பயணம் செய்ததும், பல நாள் கழித்து அம்மா, அப்பா, அண்ணன்கள், பெரியம்மா, குழந்தைகள் எல்லோரையும் பார்த்ததும் மகிழ்ச்சியளித்தது. என்னைப் பொறுத்தவரை இந்த மாதிரிப் பயணங்கள் முக்கியம். என் வாழ்க்கையில் எவை முக்கியம் எவை முக்கியமல்ல என்று நான் வரையறுத்துக்கொள்ள இவை எப்போதும் உதவியாய் இருந்து வருகின்றன.

யோசித்துப் பார்க்கையில் இப்போதைக்கு என் வாழ்க்கையில் நான் ஆர்வமாக எதிர்பார்ப்பது என்னுடைய ஓய்வுக் காலத்தை. கோவில்பட்டிக்குப் போய் அண்ணன்களுடன் ஒரே வீட்டில் மீண்டும் வாழும் காலத்தை. அப்போது வீட்டிலுள்ள பெண் குழந்தைகளெல்லாம் கல்யாணமாகி அவரவர் புகுந்த வீட்டிலிருப்பார்கள். பிள்ளை இல்லாத வீட்டில் கிழவர்கள் நாங்கள் துள்ளிக்குதிக்கும் அந்தக் காலம்... நன்றாக இருக்கும். 25-லிருந்து 30 வருடங்கள் ஆகும் என்று நினைக்கிறேன். படிக்க ஆசைப்பட்டு ஆனால் படிக்க முடியாமல் போன புத்தகங்களைப் படித்துக் கொண்டும், நினைத்தவுடன் காரை எடுத்துக்கொண்டு ஊர் சுற்றிக்கொண்டும்... நன்றாகத்தான் இருக்கும். இன்னும் கொஞ்சநாள் தான்.

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

பிளாஸ்டிக் குடும்பம்

அதீத ஒத்திகை (overrehearsal)

காலங்கடந்து நிற்கும் அறிவுரைகள்