பிளாஸ்டிக் குடும்பம்

சில நேரங்களில் நான் சுய சித்திரவதை செய்துகொள்வதுண்டு. இப்போதும் அப்படித்தான், சீமானின் வாழ்த்துகள் படத்தைப் பார்த்துக் கொண்டிருக்கிறேன். தம்பி படத்தை அந்தப் படம் வந்த புதிதிலேயே பார்த்திருந்தேன். வாழ்த்துகள் படத்தின் டிரெய்லரைப் பார்க்கையிலேயே கொஞ்சம் பயமாகத் தான் இருந்தது. இந்தப் படத்தின் பட்ஜெட்டில் மிக அதிகமாகச் செலவு செய்யப்பட்டது பேப்பருக்கும் மை-க்கும் தான் இருக்குமோ என்று தோன்றுமளவுக்குப் படம் முழுவதும் வசனம் வசனம் வசனம் தான். அதிலும் கற்பனைக்கு அப்பாற்பட்ட அளவுக்கு செயற்கையான வசனங்கள். "தம்பி தான் எனக்கு பயணச்சீட்டு வாங்கி அனுப்பினான்" என்று ஒரு விருந்தினர் சொல்வதாக வரும் காட்சி ஒன்றே போதும். படத்துல தமிழ் மட்டும் தான் பேசுவாங்களாம். மாதவனுடைய பல்ஸர் பைக்கில் ஸ்டிக்கரைக் கிழித்து தமிழில் பெயர் எழுதுமளவுக்கு அவர்களுக்கு புத்தி பேதலிக்கவில்லையே என்று மனதைத் தேற்றிக்கொண்டேன்.

இந்தப் படத்தில் எனக்கு மிகவும் நெருடலாகத் தோன்றிய விஷயம் வேறொன்று. பாவனாவின் குடும்பம் ஒரு லட்சியக் குடும்பம் என்ற அளவுக்கு பில்டப் கொடுக்கப்பட்டு காட்டப் படுகிறது. ஆனால் மனிதர்களுக்கு இடையேயான உறவுகளை இம்மியளவும் புரிந்து கொள்ளாத மாதிரி காட்சிகள், அந்தக் குடும்பத்திற்கு பிளாஸ்டிக்கில் செய்து வண்ணம் பூசப்பட்ட பொம்மை போன்ற தோற்றத்தையே அளிக்கின்றன.

பாவனாவுக்கும் மாதவனுக்கும் காதல். பாவனாவின் தாத்தாவுக்கு (இவர் ஒரு லட்சிய புருஷர்) இது பிடிக்கவில்லை. கையும் களவுமாக "மாட்டிக்கொள்ளும்" பாவனாவிடம் குடும்பத்தில் யாருமே எந்தக் கேள்வியுமே கேட்பதில்லை. அவளுக்கு அதுவரை காட்டி வந்ததைவிட அதிகமாக அன்பு காட்டுங்கள் என்று தாத்தா ஆணையிடுகிறார், அனைவரும் சிரமேற்கொண்டு அதையே செய்கிறார்கள். இதைப் போன்றதொரு சித்திரவதையை என்னால் கற்பனை செய்து கூட பார்க்க முடியவில்லை. இதில் கொடூரமான விஷயம் என்னவென்றால் இதை ஒரு பாஸிடிவான விஷயமாக சித்தரிப்பது தான். சீமான் இதையெல்லாம் நிஜ வாழ்க்கையில் முயற்சி செய்து தனது குழந்தைகளை விரக்திப் படுத்தாமல் இருப்பாராக என்று இறைவனைப் பிரார்த்தித்துக் கொள்கிறேன்.

இதைவிடக் கொடுமை என்னவென்றால் பாசம் கொஞ்சும் பூஞ்சோலையாகச் சித்தரிக்கப்படும் அந்தக் குடும்பத்தில் யாருமே -- ஒருவர் கூட -- பாவனாவிடம் அந்தரங்கமாகப் பேசுவதில்லை என்பதுதான். ஒரு காட்சியில் பாவனா தன் தாத்தாவிடம் வாதாடுகிறார், தன் காதலை அனுமதிக்க வேண்டி. மொத்தக் குடும்பமும் சுற்றி நின்று வேடிக்கை பார்க்கிறது. கொஞ்ச நேரத்திலேயே "உன் வாயை மூடிட்டுப் போ, இதுக்கு மேல இதைப் பற்றிப் பேச முடியாது" என்ற ரீதியில் பதில் சொல்லி பாவனாவைத் தாத்தா விரட்டி விடுகிறார். அதன் பின் யாருமே பாவனாவிடம் எதுவுமே பேசவில்லை. தங்களுக்குள் கூடிக்கூடிப் பேசிக்கொள்கிறார்கள் "நம்ம பொண்ணு இப்படியெல்லாம் செஞ்சுட்டாளே" என்ற ரீதியில். அந்த வீட்டு வேலைக்காரர்கள் கூட அவளிடம் அந்தரங்கமாகவோ ஆறுதலாகவோ கோபமாகவோ எதுவுமே பேசுவதில்லை. ஒரு குடும்பம் என்பதில் இருக்கும் டைனமிக்ஸை எந்த அளவுக்கு கதாசிரியர் புரிந்துகொண்டிருக்கிறார் என்பது இதிலிருந்தே தெரியும்.

எவனோ ஒருவன் படத்தில் சீமானை ஒரு நடிகனாக எனக்குப் பிடித்திருந்தது. (பள்ளிக்கூடம் படத்தில் தங்கர்பச்சானால் படமே நாறியது, சீமானின் நடிப்பு அதில் தெரியாமல் போனதில் எனக்கொன்றும் ஆச்சரியமில்லை.) அவர் இன்னும் நிறைய நடிக்க வேண்டும். அதற்காக டைரக்ட் செய்வதைக் குறைத்துக் கொள்ள வேண்டியிருந்தாலும் பாதகமில்லை என்பது அடியேன் கருத்து.

கருத்துகள்

  1. படத்துல உங்களுக்கு ரொம்ப பிடிச்ச ஒரு விஷயத்த இதுல சொல்ல விட்டுட்டீங்களே.. மறந்துட்டீங்களா? :-)

    பதிலளிநீக்கு
  2. பிரசன்னா,
    படத்தோட வீடியோ குவாலிட்டி கொஞ்சம் கம்மி. அதனால தெளிவா பாக்க முடியலை :-)

    பதிலளிநீக்கு

கருத்துரையிடுக

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

வைரமுத்துவின் ‘பாற்கடல்’

அதீத ஒத்திகை (overrehearsal)