மன்னிப்புக் கோரல்

நான் பெரும்பாலான நேரங்களில் மன்னிப்புக் கேட்பதேயில்லை. ஏனென்றால் மன்னிப்புக் கேட்பது என்பது பெரும்பாலான நேரங்களில் பிரச்சனையைப் பூசி மெழுகவே பயன்படுத்தப்படுகிறது. உதாரணத்துக்குச் சொல்கிறேன். எனக்கு நெருக்கமான ஒருவர் மன்னிப்புக் கேட்பது எப்போதுமே ஒரே மாதிரிதான்: “நான் செய்ததில் ஏதும் தவறிருந்தால் மன்னிக்கவும்.” கொஞ்சம் யோசித்தாலே இந்த வாக்கியத்தின் அர்த்தமின்மை விளங்கும்.

ஏதோ ஒன்று நடந்திருக்கிறது. அதில் இரண்டு பேருக்கிடையில் கருத்து வேறுபாடு. அந்த வேறுபாட்டைச் சரி செய்ய நினைப்பவர் “நான் செய்ததில் ஏதும் தவறிருந்தால் மன்னிக்கவும்” என்று சொல்லிவிட்டு, பிரச்சனையே தீர்ந்துவிட்டதாய் நினைத்துக்கொள்கிறார். இதனால் பிரச்சனைகள் அப்போதைக்கு மறக்கப்படுகின்றனவே தவிர அவை தீர்க்கப்படுவதில்லை. உண்மையில் பிரச்சனையைத் தீர்க்க விரும்பும் ஒருவர் என்ன செய்ய வேண்டும்?

அந்தக் கருத்து வேறுபாடு என்ன என்பதைப் பற்றி ஆழமாக யோசிக்க வேண்டும். அதில் தனது வாதம் தவறானதே என்று தோன்றினால் அத்துடன் தன்னுடைய கருத்தை மாற்றியமைத்துக்கொள்ள வேண்டும். மன்னிப்புக் கேட்பதைவிடவும் இது முக்கியமானது ஏனென்றால் இந்த மன மாற்றம்தான் இதுபோன்ற பிரச்சனைகள் மீண்டும் வராமல் தவிர்க்கும். இந்த நேரத்தில் கேட்கும் மன்னிப்பு நேர்மையானது: தனது வாதம் தவறானது என்று உணர்ந்தபின் அந்த வாதத்தை முன்வைத்ததற்காகக் கோரும் மன்னிப்பு அது.

சரி, யோசித்துப் பார்க்கையில் தனது வாதம் சரியானதே என்று தோன்றினால்? இப்போது மன்னிப்புக் கேட்டால் அத்துடன் தனக்குத் தானே ஒரு சத்தியமும் செய்துகொள்ள வேண்டும், இனிமேல் இதே போன்ற வாதத்தில் இதே நபருடன் ஈடுபடுவதில்லை என்று. இப்போது கேட்கும் மன்னிப்பு உறவைச் சரி செய்துகொள்ள; தனக்குள் எடுத்துக்கொள்ளும் சபதம் வருங்காலத்தில் இதே பிரச்சனை மீண்டும் வராமல் இருக்க. ஒரே தவறை மீண்டும் மீண்டும் செய்து, மீண்டும் மீண்டும் அதற்கே மன்னிப்பும் கோருவது சம்பந்தப்பட்டவருடனான நமது உறவையும் பாதிக்கும்; நம்முடைய சுயமரியாதைக்கும் பங்கமாகும்.

அடுத்த முறை எதற்காகவேனும் மன்னிப்புக் கேட்குமுன் இதுபற்றிக் கொஞ்சம் சிந்தித்துப் பாருங்கள்.

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

பிளாஸ்டிக் குடும்பம்

வைரமுத்துவின் ‘பாற்கடல்’

உறைந்த ஏரியும் தாகம் கொண்ட யானையும்