அதிகாலை எண்ணங்கள்

வெற்றிடம் பற்றிப் படித்திருக்கிறீர்களா?  இங்க் ஃபில்லரால் மை ஊற்ற முடிவது வெற்றிடத்தால் தான்.  இங்க் ஃபில்லரை நாம் விரலால் அழுத்தும் போது அதன் உள்ளே உள்ள காற்று வெளியேறுகிறது.  நம் விரலை ஃபில்லரில் இருந்து எடுத்து அழுத்தத்தை நீக்கும் போது ஃபில்லருக்குள் காற்று கூட இல்லாத வெற்றிடம் உருவாகிறது.  வெற்றிடத்திற்கு ஒரு பண்பு உண்டு — அதன் அருகில் இருப்பது எதுவானாலும் விசையுடன் தன்னோடு ஈர்த்துக்கொள்ளும்.  இங்க் ஃபில்லரின் துவாரம் மைக்குள் மூழ்கி இருப்பதால் ஃபில்லர் மையை தன்னுள் இழுக்கிறது.  இது தான் புட்டிக்குள் இருக்கும் மை ஃபில்லருக்குள் ஏறக் காரணம்.  இதே அடிப்படையில் தான் அடி பம்பு, தண்ணீர் மோட்டார் எல்லாமே இயங்குகிறது.
==========

ஒவ்வொரு நாளும் காலையில் எழுந்ததும் நீங்கள் எப்படி உணர்கிறீர்கள்?  உங்கள் மனதில் என்னென்ன எண்ணங்கள் தோன்றுகின்றன?  ஒவ்வொரு விழிப்பும் ஒவ்வொரு பிறப்பு என்று வைரமுத்து எழுதியிருக்கிறார்... அது உண்மைதான்.  காலையில் எழுந்ததும் சில கணங்கள் உங்கள் மனதில் எண்ணங்கள் ஏதும் தீவிரமாக இருப்பதில்லை.  முந்தைய தினம் நடந்த சம்பவங்கள், இன்று செய்ய வேண்டும் என்று நீங்கள் நினைத்துக் கொண்டவை, என்பன போன்றவற்றை நினைவில் கொண்டு வந்ததும் தான் அந்த நாள் தொடங்குகிறது.

அந்தக் காலை நேர கணங்களில் உங்கள் மனதுள்ளும் வெற்றிடம் தான் இருக்கிறது.  அந்த வெற்றிடம் தன்னை நிரப்பிக்கொள்ள எண்ணங்களைத் தீவிரமாகத் தேடுகிறது.  அந்த நேரத்தில் நீங்கள் உள்ளிழுத்துக் கொள்ளும் எண்ணங்கள் உங்கள் நாளையே தீர்மானிக்கின்றன.  இதைப் புரிந்து கொண்டதால் தான் நம் ஊரில் பெரியவர்கள் காலையில் குளித்து கடவுளைத் தொழுமுன் எதையும் செய்யாதே என்று சொன்னார்கள்.  ‘காலை எழுந்தவுடன் படிப்பு, பின்பு கனிவு கொடுக்கும் நல்ல பாட்டு’ என்று பாரதியார் சொன்னார்.

காலையில் கடவுளைத்தான் சிந்திக்க வேண்டுமென்றில்லை.  உங்களுக்குப் பிடித்த எதை வேண்டுமானாலும் சிந்திக்கலாம்.  இந்த கணம் முக்கியமானது என்ற பிரக்ஞை இல்லாமல் அற்பத்தனமான விஷயங்களையும் சிந்திக்கலாம்.  அதனால் ஏற்படும் விளைவுகள் நம்மைப் பாதிக்கும், அவ்வளவு தான்.

கடவுள் என்பது அபயம் தருவது, நம்மைக் காத்து நிற்பது, நம்மை நாம் விரும்பும் நிலைகளுக்கு வழிநடத்துவது என்று நம்புபவனுக்கு காலையில் கடவுளை நினைப்பதைப் போல நன்மை பயப்பது ஒன்றுமே இல்லை.  காலை எழுந்ததும் கடவளிடம் பயங்களை ஒப்புவித்த ஒருவனால் நாள் முழுவதும் மனபாரமின்றி தன் தொழிலைச் செய்ய முடியும்.  அதை விடப் பெரிய நிம்மதி வேறென்ன இருக்க முடியும்!

கடவுள் நம்பிக்கை இல்லாதவர்கள் காலையில் நினைத்துக் கொள்வது இதுதான் என்று எதையாவது தேர்வு செய்து அதைப் பின்பற்றலாம்.  ஒவ்வொரு மாதம் ஒவ்வொன்றை நினைத்து நாளைத் தொடங்கி எது அதிக அமைதி தருகிறது என்று சோதித்தும் பார்க்கலாம்.

கருத்துகள்

கருத்துரையிடுக

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

பிளாஸ்டிக் குடும்பம்

வைரமுத்துவின் ‘பாற்கடல்’

ஆயிரங்காலப்பயிர்