யாமறிந்த மொழிகளிலே

பல தமிழர்கள் இதைச் சொல்லிக் கேட்டிருக்கிறேன் -- "தமிழ் என்பதே ஒரு அருமையான அனுபவம்".  சிறு வயதுகளில் அதற்கெல்லாம் நான் மதிப்பே கொடுத்ததில்லை.  என் ரத்தத்தின் ரத்தமே என்று மேடையில் முழங்கும் அரசியலுக்கும் "தமிழே அமுதே"வுக்கும் பெரிய வித்தியாசம் எதுவும் அப்போது எனக்குத் தெரியவில்லை.  தமிழ் மட்டுமே தெரிந்திருந்த அந்தக் காலத்தில் ஒப்பு நோக்க வேறெந்த மொழியும் இல்லை என்பதும் ஒரு காரணம்.

இப்போது நிலைமை வேறு.  பெரும்பாலும் ஆங்கிலத்தில் தான் சிந்திக்கிறேன்.  ஆங்கிலப் பாடல்கள் கூட புரியத் தொடங்கி விட்டது.  ஆங்கிலத்தில் வாசிப்பதும் எழுதுவதும் தமிழை விடப் பலமடங்கு அதிகம்.  இந்த நிலையில் என்னால் ஆங்கிலமும் தமிழும் எனக்கு அளிக்கும் அந்தரங்க அனுபவத்தைப் பற்றி ஓரளவு பேச முடியும்.

ஜெயமோகனின் புல்வெளி தேசம் புத்தகத்தை நேற்று படித்து முடித்து, நேற்றிரவே கரிச்சான் குஞ்சு எழுதிய பசித்த மானிடம் நாவலை வாசிக்கத் தொடங்கி விட்டேன்.  தமிழ் வாசிக்கும் போது தோன்றும் அந்த எண்ணம் மீண்டும் இன்று காலையில் தோன்றியது: தமிழ் அந்தரங்கமாக என் மனதில் ஒரு இனிய பாதிப்பை ஏற்படுத்தத்தான் செய்கிறது.  அது ஒரு அழகியல் அனுபவம்.  அதற்கு என்ன காரணம் என்று யோசித்துக் கொண்டே இருந்தேன்.  ஒன்றும் பிடிபடவில்லை.

சிறிது நேரத்துக்குப் பின் தற்செயலாகக் காதில் விழுந்த பாடல் வரியில் ஒரு பதில் இருந்தது.  "பாசி மணி ரெண்டும் கோக்கையிலே பாவி மனசையும் கோத்தவளே."  தமிழில் இது மாதிரியான வரிகள் ஏகப்பட்டவை.  ஆங்கிலப் பாடல்களோடு ஒப்பிட்டால் நம் ஆள்கள் பல மடங்கு அதிகமாக உவமையையும் உருவகத்தையும் படிமங்களையும் பயன்படுத்தியிருப்பார்கள்.  ஜெயமோகன் புல்வெளி தேசத்தில் கூறியிருந்த ஒரு கருத்து "இலக்கியம் என்பது பண்பாட்டைச் சேகரிக்கும் கருவி" என்பது.  தமிழ் இலக்கியத்துக்கு ஆயிரக்கணக்கான ஆண்டுகால வரலாறு இருக்கிறது.  அந்தப் பின்புலம் தான் இன்றைக்கு நாம் எழுதும் சினிமாப் பாடல்களில் கூட உருவகங்களை நம்மை எதிர்பார்க்க வைக்கிறதோ என்னவோ.

-----
ஆங்கிலத்தில் நான் ரசிக்கும் கவிஞர்களில் ஒருவர் லியனர்ட் கோஹன்.  இந்தக் கவிதையைக் கேட்டால் உங்களுக்குப் புரியும், ஏன் என்று.
கோஹன் ஒரு இசையமைப்பாளரும் கூட.  பல நல்ல பாடல்களும் புத்தகங்களும் எழுதியிருக்கிறார்.

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

பிளாஸ்டிக் குடும்பம்

வைரமுத்துவின் ‘பாற்கடல்’

ஆயிரங்காலப்பயிர்