இப்போது நான் சுக்குத் தண்ணி ரசிகன்

காஃபி குடிக்கும் பழக்கம் சின்ன வயதிலிருந்தே எனக்கு உண்டு. காஃபியின் மணமும் சுவையும் எப்போதுமே என்னை ஈர்ப்பவை. இப்போது சில மாதங்களாக எனக்கு ஜீரணக் கோளாறு இருப்பதால் காஃபியை நிறுத்திப் பார் என்று ஒரு நண்பர் அறிவுரை கூறினார். ஒரு வாரம் காஃபியே குடிக்கவில்லை. ஜீரணக் கோளாறு முற்றிலும் சரியாகவில்லை, ஆனால் இரவில்
ஆழ்ந்த தூக்கம் வருகிறது. முன்பு காலை 7:30 மணிக்கு முன் எழுவதே கடினம்; ஆனால் இப்போது சுலபமாக 6:30 மணிக்கு விழித்து விடுகிறேன்.

இருந்தாலும் காஃபி குடிப்பதை நிறுத்துவது கஷ்டமாகத்தான் இருந்தது. பிறகு தான் யோசித்து நம் ஊரில் கிடைக்கும் சுக்கு மல்லி காஃபியைக் குடித்தால் என்ன என்று யோசித்தேன். பெயர் தான் சுக்கு மல்லி “காஃபி”யே தவிர அதில் காஃபிப் பொடி சேர்ப்பதே கிடையாது. (அதனால் இப்போது அதை “சுக்குத் தண்ணி” என்று நான் அழைக்கிறேன்.)

வீட்டிலேயே சுக்கு, மிளகு, மல்லி எல்லாம் வறுத்து அரைத்து ஒரு பாட்டிலில் அடைத்து அலுவலகத்திற்குக் கொண்டு போய் விட்டேன். மாலை நேரத்தில் அலுவலகத்தில் தேநீர் போடுவதற்காக வைத்திருக்கும் வெந்நீரில் சுக்குத் தண்ணி தயார் செய்து குடிக்கிறேன். இரண்டு நாளிலேயே அதன் சுவை மிகவும் பிடித்துப் போய் விட்டது. இனிமேல் தினமும் சுக்குத் தண்ணி குடித்து விட வேண்டியது தான். 😋


ஒரு பாட்டிலில் சுக்கு மல்லிப் பொடி, அடுத்த பாட்டிலில் பனங்கற்கண்டு, அருகே குடிக்கத் தயாராகிக் கொண்டிருக்கும் சுக்குத் தண்ணி

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

பிளாஸ்டிக் குடும்பம்

வைரமுத்துவின் ‘பாற்கடல்’

ஆயிரங்காலப்பயிர்