தீதும் நன்றும்

தமிழ் சினிமாவில் ரொம்ப நாளாகவே துன்பப்படுவது போற்றப்படுகிறது. நாயகர் (நாயகன், நாயகி, அவர்களது குடும்பம், நண்பர்கள் முதலியோர்) நல்லது மட்டுமே எப்போதும் செய்தாலும் அவர்களைத் துன்பம் வந்தடைவதுபோல் காட்சிகள் வைப்பது மட்டுமல்லாது நேரடியாகவே ‘துன்பப்படுவது உயரந்தது’ என்று சொல்வதும்கூட உண்டு.
பாஞ்சாலி உன்னிடத்தில் சேலை கேட்டாள்
பார்த்தனவன் உன்னிடத்தில் கீதை கேட்டான்
நானிருக்கும் நிலையில் உன்னை என்ன கேட்பேன்
இன்னும் நன்மை செய்து துன்பம் வாங்கும்
உள்ளம் கேட்பேன்
நன்மை செய்து துன்பம் வாங்கும்
உள்ளம் கேட்பேன் (வரிகள் • பாடல்)

இந்தப் பாடல் வரிகள் அதற்கு ஓர் உதாரணம். இந்தப் பாடலை நான் முதல் முதலில் கேட்டபோது எனக்கு இருபத்தொன்று அல்லது இருபத்திரண்டு வயது இருந்திருக்கும். அதற்கு முன் துன்பப்படுவது பெருமை என்று ஒரு உள்ளுணர்வு மட்டும் இருந்த எனக்கு இதன்பின்னர் துன்பப்படுவது வெளிப்படையான விருப்பமாகவே ஆனது.

ஒரு வேலையை இரண்டு வழிகளில் செய்யலாம் என்றால் அதில் கஷ்டமான வழியையே தேர்ந்தெடுப்பேன். கஷ்டமான வழியில் அந்த வேலையை முடித்தால் கஷ்டப்பட்டு சாதித்தோம் என்ற தற்பெருமை. வேலையை முடிக்காமல் போனால் கஷ்டப்பட்டோம் என்பதாலேயே தற்பெருமை. ரொம்ப வருடங்களுக்கு இது தொடர்ந்தது. அந்த நேரத்தில் வாழ்க்கையில் சந்தோஷத்தைத் தேடுபவர்களை இளக்காரமாக நினைத்ததும்கூட உண்டு.

நாள் ஆக ஆகக் கொஞ்சம் கொஞ்சமாக என் மனதில் மாற்றம் ஏற்பட்டது. என் மன மாற்றத்திற்கு பல காரணங்கள் இருந்தாலும், முக்கியமாக ஓஷோவின் புத்தகங்கள் என் மன மாற்றத்தை ஆரம்பித்து வைத்தன. நான் மிக மதிக்கும் எழுத்தாளர் ஜெயமோகன் ஒரு வாசகருக்கு எழுதிய கடிதம் அதீதமான தூண்டுதலைத் தந்தது. “சுய இரக்கம் என்பது தன் ரத்தத்தையே சுவைப்பது போன்றது” என்று அவர் சொன்னார். இன்றைக்கு ருசியாக இருக்கும், ஆனால் நாளடைவில் அதன் மூலம் நல்லது எதுவும் வராது.

உங்கள் துன்பத்தை நீங்கள் சிலுவை சுமப்பதுபோல் சுமந்தாலோ, உங்களுக்கு இருக்கும் துன்பம் அநியாயமாக உங்கள்மேல் சுமத்தப்பட்டது என்று நீங்கள் நினைத்தாலோ, உங்கள் நிலையில் நானும் இருந்தவன் என்ற முறையில் நான் உங்களுக்குச் சொல்ல விரும்புவது ஒன்றுதான். “தீதும் நன்றும் பிறர்தர வாரா” என்று கணியன் பூங்குன்றனார் சொன்னது வாழ்வின் அடிப்படை உண்மைகளில் ஒன்று. வாழ்க்கையில் நீங்கள் படும் துன்பங்களுக்கும் இன்பங்களுக்கும் நீங்களேதான் காரணம். மற்றவரால் துன்பமோ இன்பமோ வந்ததாக நினைக்கும் வரை கடலலையில் அகப்பட்ட இலை போல நீங்கள் அலைக்கழிக்கப்படுவீர்கள்.

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

பிளாஸ்டிக் குடும்பம்

வைரமுத்துவின் ‘பாற்கடல்’

அதீத ஒத்திகை (overrehearsal)