நட்பின் மரணம்

சில மாதங்களுக்கு முன் Capote என்ற ஆங்கிலப் படத்தைப் பார்த்தேன். என்னை மிகவும் பாதித்த திரைப்படங்களில் அதுவும் ஒன்று. ஓஷோவின் ஒரு புத்தகத்தில் படித்தது நினைவுக்கு வருகிறது. "சிலவற்றைப் பார்க்கையில் அழகாக இருப்பதாக உங்களுக்குத் தோன்றுகிறது. ஏனென்றால் உங்களுக்குள் இருக்கும் மற்றொரு அழகான விஷயத்தை அது ஒத்திருக்கிறது" என்று சொல்கிறார் ஓஷோ. அதுபோலத்தான் திரைப்படமும் இலக்கியமும் போலும்.

Capote படத்தில் ஒரு காட்சியில், பெரி (Perry, மரணதண்டனைக் கைதி) படத்தின் நாயகனான கபோடியிடம் கூறுவான், "You pretended to be my friend" என்று. அந்தக் காட்சியை என்னால் மறக்கவே முடியவில்லை. வாழ்க்கையில் நம்மை பாதிக்கும் ஓரிரு காட்சி/நிகழ்ச்சிகளை மட்டும் மனம் திரும்பத் திரும்ப நினைத்துப் பார்க்கிறது. அந்த காட்சியும் எனக்கு அப்படித்தான்.

ஒரு கதாபாத்திரத்தின் நிலையில் நிஜ வாழ்க்கையில் நாமும் எப்போதேனும் இருந்திருந்தால், அந்தக் காட்சி, வசனங்களால் மனதில் ஏற்படும் பாதிப்புகளை என்னால் வார்த்தையில் வெளிப்படுத்த முடியவில்லை.

ஒவ்வொரு முறை அதை நினைக்கும் போதும், நானும் அதே வார்த்தைகளைச் சொல்கிறேன் -- என் மனதின் முன் ஒரு தோழியை நிறுத்தி. எதற்காக நாங்கள் நண்பர்களாய் இருந்தோம்? எதற்காக நான் அந்த நட்பு நிரந்தரம் என்று நம்பத் தொடங்கினேன்? பிறகு எதற்காகப் பிரிய வேண்டி வந்தது? எதற்காக இத்தனை கசப்பு உருவாகியது? யார் செய்த தவறு? எல்லா நேரத்திலும் இத்தனை கேள்விகளும் எழுகின்றது.

நட்பாயிருந்த நாட்களில் நான் கேட்டவை எல்லாமே பொய்யான வார்த்தைகள் தானா? நம்ப மறுக்கிறது மனம். நேற்று மலர்ந்த மலர் இன்று வாடி உதிர்ந்து போயிருப்பினும் அந்த ஒருநாளில் அது அழகானதொரு வாழ்க்கை வாழ்ந்தது உண்மை. இப்போது எதிரில் வந்தால் கூட முகம் பார்க்க மனமில்லாமல் விலகிச்சென்றாலும், அன்றொரு நாள் சிநேகித்திருந்தது உண்மை. காலம் மாறுகையில் மரம், செடி, மலை எல்லாம் மாறும் போது மனிதர்கள் மாறுவதும் இயற்கைதான் போலும்.


நண்பர்களின் மரணத்தை விடவும் நட்பின் மரணம் மிகக்கொடியது என்று எஸ். ராமகிருஷ்ணன் எழுதியது வாஸ்தவம் தான்...

கருத்துகள்

கருத்துரையிடுக

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

பிளாஸ்டிக் குடும்பம்

வைரமுத்துவின் ‘பாற்கடல்’

அதீத ஒத்திகை (overrehearsal)