ஈஸ்வர அல்லா தேரே நாம்

ஜெயகாந்தனின் ஈஸ்வர அல்லா தேரே நாம் நாவலை இப்போதுதான் படித்து முடித்தேன். மத நல்லிணக்கத்தை மையக்கருவாகக் கொண்ட நாவல் என்றாலும் காந்தியம், காதல், சமூகம் என்று பலவற்றையும் விவாதிக்கும் நாவல். நாவலில் எனக்குப் பிடித்த வரிகள்:
  • மனிதன் சம்பந்தப்பட்ட எல்லாமே மாயைதானே!
  • உயர்நோக்கமுள்ள கல்வியும் ஞானமும் எளிமையான வாழ்வோடு இணைகிறபோது, எத்தகைய இழிநிலையிலிருந்த கடையனும் அந்தணனே ஆகிவிட மாட்டானோ?
  • அருகம்புல்லுக்கு ஆயுள் முடிவு என்பதே இல்லை. காய்ந்து தீய்ந்து மண்ணோடு மக்கிப் போயிருக்கும். சில துளி மழை விழுந்தால் மறுபடியும் பசுமையோடு சிலிர்த்தெழுந்து முளைக்கும்! மெய்யான லட்சியங்கள் அருகம்புல்லைப் போன்றவை. அவை மக்கினாலும் மடிந்து விடுவதில்லை.
  • மனிதர் இல்லாத எந்தப் புனித இடமும் பாழ் அடைந்து விடுவதுதான் இயல்பு.
  • நான் படிச்சவரைக்கும் பைபிள், குரான், ஜென்டவெஸ்தா எல்லாமே வேறு வேறு மத நூல்கள் என்று சொல்லப்பட்டாலும், ஒரு மாபெரும் புத்தகத்தின் பல அத்தியாயங்களைத் தனித்தனியே படிக்கிறதாகவே உணர்ந்தேன். அப்படி உணர்கிறவனை காந்தி மதத்தைச் சேர்ந்தவன் என்று சொல்லலாம்.
  • கொள்கைகளாலும் மரபுகளாலும் மதங்கள் அமைந்ததாகச் சொல்கிறார்கள். இல்லை... இல்லை. அது குல்லாய்களாலும் குடுமிகளாலும் சில குறிப்பிட்ட அன்னியச் சொற்களைக் கலந்து தாய்மொழியில் பேசுவதாலும் வேறு பல புறத்தோற்றங்களினாலும்தான் வாழ்ந்துகொண்டிருக்கிறதோ.
  • மதத்தை ஏற்றுக்கொள்ளலாம்; விட்டுவிடலாம். அதைச் சீர்திருத்த நமக்கு என்ன உரிமை இருக்கிறது.
  • மதம்னு சொல்லுங்கோ, மார்க்கம்னு சொல்லுங்கோ, என்ன வேண்டும்னாலும் சொல்லுங்கோ... பெத்தவங்க பிள்ளைங்களுக்கு வாழறதுக்கு வேண்டிய நெறிமுறைகளைச் சொல்லிக் கொடுக்கறாகளே, அதுக்குப் பேர்தான் மதம்.
  • காலம் காலமாய் இந்தக் காதல் என்கிற பெண்களைப் பிடித்த ‘பீடை’ விவகாரம் இப்படித்தான் தொடர்கிறது. பார்த்தார்கள், சிரித்தார்கள், ஒருவரைப்பற்றி ஒருவர் கற்பனைகளை வளர்த்துக்கொண்டு கதைகளுக்கும் வதந்திகளுக்கும் இலக்கானார்கள் என்பது தவிர, வேறு ஆழ்ந்த காரணம் ஏதும் இந்தக் காதலுக்கு இல்லை.
  • பாடுபடறவக என்னைக்கும் பாடுபடத்தான் வேணும். பலனை அனுபவிக்கிறவக என்னைக்கும் பலனைத்தான் அனுபவிப்பாக போலிருக்கு.
  • அஞ்சி அஞ்சி அனுபவிக்கிற இன்பம் மிக விரைவில் நைந்து போய்விடும்.
  • பொதுவாக மாலைநேரம் என்பது மனிதர்களுக்குக் குதூகலம் தருவதாகவும், கொண்டாடத் தக்கதாகவும் அமைகிறது. இந்தச் சமூக உணர்வே இல்லாமல் தனிமைப்பட்ட காதலர்கள்தான் இந்த நேரத்தை ஒன்று திருட்டுத்தனமானதாக, அல்லது சோகமயமானதாக ஆக்கிக்கொண்டு விடுகிறார்கள்.
  • அதனால்தான் சொன்னேன், ‘காதல்தான் உண்டு. அதில் தோல்வி என்பதே இல்லை’ என்று. ஆனால் எப்போது [காதலுக்குத்] தோல்வி இல்லை? அந்தக் காதலர்கள் பிரிந்திருந்தாலும் சேர்ந்திருந்தாலும் பெரிய லட்சியங்களோடு தம்மை இணைத்துக்கொண்டிருந்தால் ஒருபோதும் அவர்களுக்குத் தோல்வி இல்லை. பிரிந்த அக்காதலர்களை அந்த லட்சியங்களே சேர்த்து வைத்துவிடும்.
  • மிகவும் அவசியமாகவும் அர்த்தமுடையதாகவும் வாழ்க்கையில் சம்பந்தப்பட்டுக் காதலை உணர்பவர்களே லட்சியம் என்ற ஒன்றை எதன் பொருட்டும் கைவிடாமல் மணவாழ்க்கையை மேற்கொள்கிறார்கள். எனவே அப்படிப்பட்டவர்களின் காதல் அவர்களை ஒரு நோய்போல வருத்துவதே இல்லை. லட்சியமில்லாத மனிதர்களுக்கு ஏற்படுகிற ஏற்படுகிற காதலே நோய். ஒரு சமூகம் அதை நோயாகவே பாதிக்கும்; அவர்கள் காதலும் அப்படியே நாளடைவில் ஒரு நோயே ஆகிவிடும்.
  • ஒரு குடும்பத்தில் இல்லாமையும் வறுமையும் இருப்பதுகூடக் கொடுமையல்ல; அது காரணமாக அவர்கள் அன்பற்றவர்களாகவும் பண்பற்றவர்களாகவும் ஆகிவிடுகிறார்களே, [அதுவே கொடுமை].
  • காலமும் நேரமும் கைகூடி வருகிறபோதுதான் ஒருவர் எடுத்த காரியம் யாவினும் வெற்றியாகிறது.
  • எந்த ஜாதியிலும் ஏழைகளுக்குத்தான் கஷ்டம்.

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

பிளாஸ்டிக் குடும்பம்

வைரமுத்துவின் ‘பாற்கடல்’

உறைந்த ஏரியும் தாகம் கொண்ட யானையும்