தேய்பிறை

'சிலநாள் இன்பம் சிலநாள் துன்பம் என்பதாய் மனித வாழ்க்கை ஏனுள்ளது குருவே?'

வானத்தை அண்ணாந்து பார்த்தார் குரு.  நிலவைப் பார்த்தவாறே சொன்னார்.  'முழு நிலவு எத்தனை அழகாய் இருக்கிறது!'

'ஆனால் நேற்றல்லவா பௌர்ணமி?' மனதில் நினைத்தாலும் நான் அதை வெளியில் சொல்லவில்லை.

என் முகம் நோக்கி முறுவலித்த குரு சொன்னார் 'ஆம், நேற்றுத்தான் பௌர்ணமி.  சொல் இராகவா, பௌர்ணமி இரவு முழுவதும் முழு நிலவு தெரியுமென்றா நினைக்கிறாய்?  கொஞ்சம் கொஞ்சமாய் வளந்து வரும் நிலவு ஒரே ஒரு கணத்தில் முழுநிலவாய்க் காட்சியளித்துப் பின் கொஞ்சம் கொஞ்சமாய் தேயத்தொடங்கவில்லை என்று எப்படித் தெரியும் உனக்கு?'

'அப்படியென்றால் இன்பம் துன்பம் என்பதெல்லாம் வெறும் காட்சி மயக்கங்கள் தானா?'

'ஆமென்று சொன்னால் நம்பி விடுவாயா?'

இல்லையென்பது தான் பதில்.  ஆனால் மௌனமாய் தலை கவிழ்ந்தேன்.

'வளர்வதெல்லாம் தேயுமென்றும் தேய்வதென்பதே மீண்டும் வளர்வதற்காகத்தான் என்றும் ஒரு சாரார் நம்புகிறார்கள்.'

'ஆனால் எந்நாளும் மாறாமல் இருக்கும் கதிரவனும் கடலும் மலைகளும் இருக்கும் பிரபஞ்சத்தில் தானே மறைந்து வளரும் நிலவும் இன்பமும் ஒளியும் இருக்கின்றன.  பிரபஞ்சப் பொது விதி என்று எதுவுமே இவற்றை ஆட்சி செய்யவில்லையா?  ஏன் ஒவ்வொன்றும் அதனதன் போக்கில் இருக்கின்றன?'

'அதனாலேயே தான் உன் அண்ணன் உலைக்களத்தில் இரும்புருக்கும் வேளையில் நீ உன் உயிருருக்கி வேதம் படிக்கிறாய் என்பதையும் மறவாதே.'

மௌனமாய் குருவையே பார்த்தவாறிருந்தேன்.

'திட்டவட்டமான பதிலைத் தேடி உனக்குமுன் அலைந்த மாமனிதர்கள் எத்தனையோ பேர் சுவடில்லாமல் மறைந்து போயினர்.  அவர்களில் சிலர் உன் தேடல் உன்னை எங்கு கொண்டு சேர்க்கும் என்று நினைக்கிறாயோ, அங்கு போய்ச் சேர்ந்துமிருக்கலாம்.  ஆனால் நீ கற்பனை செய்யும் அவ்விடம் உன் கற்பனையில் போலவேதான் இருக்கிறது என்று நம்பி விடாதே.'

குழம்பி மீண்டும் தலைகுனிந்தேன்.

வானில் நிலா அணு அணுவாய்த் தேய்ந்த வண்ணமிருந்தது.

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

பிளாஸ்டிக் குடும்பம்

வைரமுத்துவின் ‘பாற்கடல்’

அதீத ஒத்திகை (overrehearsal)