இடுகைகள்

பிப்ரவரி, 2008 இலிருந்து இடுகைகளைக் காட்டுகிறது

பீமா

படம் பார்த்து முடித்த அடுத்த நொடியில் இதை எழுதுகிறேன். லிங்குசாமி 'ஜி'க்கு அடுத்து இப்படி ஒரு படம் எடுத்திருக்க வேண்டியதில்லை. நான்கு வரிக் கவிதையில் சொல்ல முடிந்ததை படமாக எடுப்பதோ, மற்றவர்களுக்கு புத்தி சொல்கிறேன் பேர்வழி என்று படம் எடுப்பதோ எப்படி அவர்களுக்கு மனநிறைவை அளிக்கிறது என்றுதான் புரியவில்லை. படத்தில் மொத்தமே இரண்டு சீன் அல்லது வசனம் தான் எனக்குப் பிடித்தது. எந்தக் காட்சி என்று இப்போது நினைவிலில்லை. தயிர்சாதத்தைக் கூட கேவலமாக சமைக்க முடியும் என்று எங்கள் ஆபிஸில் சாப்பிட்டால் புரியும். அதுபோலவே ரொம்ப எளிதாக நன்றாக அமைக்க முடிந்து காட்சிகளில் கூட கோட்டை விட்டது எனக்கு ஏமாற்றமே. பல காட்சிகள் பழைய படங்களிலிருந்து சுடப்பட்டது வேறு இம்சை. " யார் சாமி இவன்? சத்தியமா சொல்றேன், இருபத்தஞ்சு வயசுல என்னையே பாத்த மாதிரி இருக்கு டயலாக்கை டிரெய்லர்ல பாக்கும்போதே டவுட் ஆனேன்" என்றுதான் மனதிற்குள் தோன்றுகிறது :)

விண்ணப்பம்

நடு இரவில் கண்விழிக்கும் போதும் கொட்டும் மழையில் வீடு திரும்பும் போதும் நாக்கில் காய்ச்சல் கசக்கும் போதும் நாவலின் கடைசிப் பக்கம் வாசிக்கும் போதும் ஜன்னல் இருக்கை ரயில் பயணத்திலும் கர்ப்பக்கிரகத்திலிருந்து வெளிவந்தவுடனும் உன் முகம் பார்க்கத்தான் வேண்டுகிறேன். என்னோடே இருப்பாயா, எப்போதும்?

மனம்

மறுபடி அடுக்கி நிமிர்வதற்குள் மீண்டுமொரு காற்று. மனமும் சீட்டடுக்கு மாளிகைதான்.

அறிகுறிகள்

மடியில் படுத்து அழத்தோன்றும். விஸ்வரூபம் கண்ட அர்ஜுனனாய் மலைத்து நிற்கும். கண்மூடி இருக்கையில் தலையின்கீழ் உடலும், உடலின்கீழ் உலகும் நழுவிப்போய் நாடகமாடும். ஏதோ ஒரு வசனத்தை திரும்பத் திரும்ப சொல்லிப் பார்க்கும். மரணப்படுக்கையிலும் ஒவ்வொரு காதலிலும்.